6.9.08

துபாயில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள்

துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி பழைய மாணவர்கள் சந்திப்பு :
முனைவர் தாவூத் பாட்சா - எம். அக்பர் கான் - பேராசிரியர் கலந்தர் பங்கேற்பு - வணிகத்துறையில் முத்திரை பதிக்கும் சாதிக் காக்காவிற்கு விருது.
துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 04.09.2008 வியாழன் மாலை துபாய் தேரா லேண்ட் மார்க் ஹோட்டலில் நடைபெற்றது
ஈடிஏ ஸ்டார் பள்ளிகளின் இயக்குநர் பேராசிரியர் கலந்தர் தலைமை தாங்கினார். அனஸ் இறைவசனங்களை ஓதினார். ஹமீதுர் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார்.
பேராசிரியர் கலந்தர் அவர்கள் தனது தலைமையுரையில் 1950 ஆம் ஆண்டு 12 ஆசிரியர்களுடனும் 250 மாணவர்களுடனும் துவங்கப்பட்ட கல்லூரி இன்று 220 ஆசிரியர்களுடனும், 160 அலுவலகப் பணியாளர்கள் மற்றும் 7200 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டுள்ளது என்றார். இத்தகைய சிறப்புக்கு முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு இன்றியமையாதது என்றார்
படித்தோம், பணிபுரிந்தோம், உதவுவோம் எனும் நோக்கத்தைக் கொண்டவர்களாக நாம் திகழவேண்டும் என்றார். துவக்கவுரையாற்றிய அமீரக ஜமால் முஹம்மது கல்லூரி பழைய மாணவர் சங்க பொதுச்செயலாளர் எம். அப்துல் ரஹ்மான் அவர்கள் தனது உரையில் வருடந்தோறும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கல்லூரியில் பழைய மாணவர் தினம் அனுஷரிக்கப்படுகிறது. இவ்வாண்டு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், டாக்டர் ஹிமானா சையத், ஜித்தா அப்துல் மாலிக் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்றதை நினைவு கூர்ந்தார். இதுபோன்ற சமயத்தில் தாயகம் செல்லும் மாணவர்கள் இந்நிகழ்வுகளில் பங்கேற்க கேட்டுக் கொண்டார்.வரும் ஆண்டில் துபாயில் அனைத்து நாடுகளின் ஜமால் முஹம்மது கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர் சந்திப்பு ஒன்றிற்கு ஜித்தா அப்துல் மாலிக் ஏற்பாடு செய்து வருவதைக் குறிப்பிட்டார்.
பழைய மாணவர்களான தாவூத் பாட்சா, அப்துல் கத்தீம் உள்ளிட்டோர் கல்லூரிக்கு ஆரமப்த்தில் அர்ப்பணித்த கட்டிடத்தின் காரணமாக இன்று கல்லூரி வளாகத்தில் பழைய மாணவர்கள் தங்களது பங்களிப்புடன் அதிக அளவில் கட்டிடங்கள் நிறைந்து காணப்படுகின்றன
இவ்வாண்டு நடைபெற்ற நிகழ்வில் அமீரக ஜமால் முஹம்மது கல்லூரி பழைய மாணவர் சங்க தலைவர் சாதிக் காக்கா அவர்கள் வணிகத்துறையில் சிறந்து விளங்கி வருவமைக்காக விருந்து வழங்கப்பட்டது. அதனை பேராசிரியர் கலந்தர் அவர்கள் வழங்க சாதிக் காக்கா சகோதரர் ஹாமிம் மற்றும் அவரது புதல்வர்
.ஏற்புரை நிகழ்த்திய சாதிக் காக்கா புதல்வர் தனது தகப்பனார் ஜமால் முஹம்மது கல்லூரியில் பயின்ற காலம் தனது வாழ்வின் பொற்காலம் எனக் கூறியதைக் குறிப்பிட்டார். அங்கு பெற்ற படிப்பினைகளை தினமும் தங்களுக்கு கூறி வருவதைக் குறிப்பிட்டார்.
சிறப்புச் சொற்பொழிவாளர் முனைவர் தாவூத் பாட்சாவிற்கு ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மனிதவள மேம்பாட்டுத் துறை எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் எம். அக்பர் கான் பொன்னாடை அணிவித்தார்.சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்திய ராஜகிரி தாவூத்பாட்சா கல்லூரி நிறுவன தாளாளர் முனைவர் தாவூத் பாட்சா அவர்கள் தனது உரையில் ஜமால் முஹம்மது கல்லூரி என்ற நிறுவனம் உருவான வரலாற்றை எடுத்துரைத்தார். இக்கல்லூரி உருவாகக் காரணமாய் அமைந்த ஜமால் முஹம்மது, காஜா மியான் உள்ளிட்டோரை நினைவு கூர்ந்தார். மேலும் சமுதாயக் கல்வி நிறுவனங்கள் உருவாகக் காரணமாய் இருந்த கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத், ஜஸ்டிஸ் பஷீர் அஹமத் சையித், மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர், அதிராம்பட்டினம் காதர் முகைதீன் உள்ளிட்டோரையும் நினைவு கூறத்தவறவில்லை.ஜமால் முஹம்மது கல்லூரி என்ற ஒன்று உருவானதன் காரணமாய் நம்போன்ற எண்ணற்றோர் இன்று பணிபுரிந்து கொண்டிருக்கிறோம். நான் கல்லூரி உருவாக்க காரணமாய் இருந்ததும் ஜமால் முஹம்மது கல்லூரி தான். பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்திய அவர் குறைந்த பட்சம் அவர்கள் ஆசிரியக் கல்வி பெறுவதற்காவது நாம் துணை நிற்க வேண்டும் என்றார். மேலும் கல்லூரி முதல்வர் ஷேக் முஹம்மது, நிர்வாகத்தினர், துணை முதல்வர் பேராசிரியர் எம்.எம். ஷாகுல் ஹமீது உள்ளிட்டோரின் சேவைகளை இங்கு நினைவு கூர்ந்தார்.நிறைவாக இறைவன் தமக்கு வழங்கியதை கொடுப்பதன் மூலம் நாம் அதிகதிகம் பெறக்கூடியவர்களாக உயர்வோம் எனக்கூறி தமது உரையினை நிறைவு செய்தார்.முதுவை ஹிதாயத் நன்றி கூற இரவு விருந்திற்குப் பின்னர் நிகழ்ச்சி நிறைவுற்றது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜாபர் சித்திக், காஜா உள்ளிட்டோர் செய்திருந்தனர். நிகச்ச்சியில் ஈமான் பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி, கவிஞர் அப்துல் கத்தீம், முஹம்மது ஃபாரூக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

0 comments: